கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிப்பு-விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிப்பு-விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 23 March 2020 11:00 PM GMT (Updated: 23 March 2020 8:08 PM GMT)

மணிகண்டம், துறையூர், புள்ளம்பாடி ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மணிகண்டம்,

மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகள் பற்றிய ஆலோசனை கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வேதலட்சுமி (வட்டார ஊராட்சி) தலைமை தாங்கினார். இதில் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மணிகண்டம் ஒன்றியம் அல்லித்துறை ஊராட்சியில் நடந்த கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சரவணன் தலைமையில், ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோர் இணைந்து அப்பகுதியில் உள்ள கடைகள் வீடுகள், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

துறையூர்

துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்களாந்தபுரம் ஊராட்சியில் காளிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள டீக்கடைகள், மருந்து கடைகள், மளிகை கடை, ரேஷன் கடை உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊராட்சி தலைவர் ஜோதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் மதூராபுரி ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ், ஊராட்சி தலைவர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலையில் ஊராட்சியில் மக்கள் கூடும் இடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சொரத்தூர், நரசிங்கபுரம், வேங்கடத்தனூர் ஊராட்சியிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

புள்ளம்பாடி

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ரசியா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், ஜோஸ்பின்ஜெஸிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மருத்துவ அலுவலர் ஆல்வின், வட்டார சுகாதார ஆய்வாளர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் பரவும்முறை, அறிகுறிகள், நோயின் தாக்கம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் 33 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உப்பிலியபுரம்

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள நாகநல்லூர் கிராமத்தில் உப்பிலியபுரம் வட்டார மருத்துவர் மதுசூதனன் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா வைரஸ் குறித்து நலக்கல்வி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் கை கழுவும் முறை குறித்து சுகாதார தன்னார்வ பணியாளர்களால் செயல்முறை செய்து காட்டப்பட்டது. முகாமில் மண்டல வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சின்னதுரை நன்றி கூறினார்.

திருச்சி கிழக்கு தாலுகா

திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தெப்பக்குளம் நகர்ப்புற சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜெசிமாபேகம் தலைமை தாங்கினார். திருச்சி கிழக்கு தாசில்தார் மோகன், கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்சி தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன்கடை ஊழியர்கள், விற்பனையாளர்கள் மற்றும் போலீசாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்வது எப்படி? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல் திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி, துறையூர் மற்றும் தொட்டியம் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் ரேஷன் கடை விற்பனையாளர்கள், போலீசாருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தீயணைப்பு துறை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் கைகளை கழுவிவிட்டு உள்ளே நுழைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தீயணைப்புத்துறை சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் முன்னிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கைக்கழுவும் முறை குறித்தும், எவ்வாறு சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்றும் விளக்கி கூறி விழிப்புணர்வு அளித்தனர். திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான போலீஸ் நிலையங்களுக்கு வருபவர்கள் கை கழுவிவிட்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story