விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின


விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 26 April 2020 10:47 PM GMT (Updated: 26 April 2020 10:47 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெளிச்சோடி காணப்பட்டன.

விழுப்புரம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு முடிவடைந்த பிறகும் இந்நோய் தொற்றின் தாக்கம் குறையாததால் வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக கடை பிடிக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் இறங்கியுள்ளது. பொதுமக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கிராமப்புற மக்கள் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெறுவதற்கு ஏற்ப வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையின் சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

கடைகள் அடைப்பு

இதனிடையே சாலையில் தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரசின் தாக்கம் குறைய வில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா வைரசால் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க விழுப்புரம் மாவட்டத்தில் 26-ந்தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மருந்தகங்கள், பால் பூத்துகளை தவிர்த்து அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் விழுப்புரம் நகரத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

போலீசார் தீவிர பாதுகாப்பு

இதேபோல் ஊரடங்கால் திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், மயிலம் உள்பட விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேலும் ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் மருந்தகங்கள் மட்டும் திறந்து இருந்தன. ஊரடங்கையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக செஞ்சியில் டிரோன் கேமரா மூலம் அனைத்து பகுதிகளையும் போலீசார் கண்காணித்தனர்.


Next Story