இலங்கையில் புற்றுநோயால் மரணம்: தந்தையின் முகத்தை கடைசியாக பார்க்க அனுமதிக்க வேண்டும் சிறை அதிகாரிகளுக்கு முருகன் கோரிக்கை


இலங்கையில் புற்றுநோயால் மரணம்: தந்தையின் முகத்தை கடைசியாக பார்க்க அனுமதிக்க வேண்டும் சிறை அதிகாரிகளுக்கு முருகன் கோரிக்கை
x
தினத்தந்தி 28 April 2020 4:37 AM GMT (Updated: 28 April 2020 4:37 AM GMT)

இலங்கையில் புற்றுநோயால் மரணம் அடைந்த தந்தையின் முகத்தை வீடியோகால் மூலம் கடைசியாக பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று முருகன், சிறை அதிகாரிகளுக்கு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் இருவரும் விடுதலை செய்யக்கோரி மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதற்கிடையே முருகனின் தந்தை வெற்றிவேல் (வயது 75) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நிலை நேற்று முன்தினம் மோசமானது.

அதையடுத்து முருகனின் வக்கீல் புகழேந்தி தமிழக முதல்-அமைச்சர், முதன்மை செயலாளர், ஜெயில் டி.ஜி.பி., ஐ.ஜி., வேலூர் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார். அதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் முருகனின் தந்தை வெற்றிவேல் மருத்துவமனையில் உள்ளார். எனவே தந்தையை வீடியோகால் மூலம் முருகன் பார்க்க அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த கடிதத்தின்பேரில் முருகனை வீடியோகால் மூலம் தந்தையை பார்க்க அனுமதி கொடுக்கவில்லை. அதனால் முருகன் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார்.

முகத்தை பார்க்க அனுமதிக்க வேண்டும்

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றிவேல் நேற்று உயிரிழந்தார். அவரின் உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முருகன், நனிளி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்ட இருவரும் கதறி அழுதுள்ளனர். அதைத்தொடர்ந்து முருகன், சிறை அதிகாரிகளிடம், உயிரிழந்த தந்தையின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். அதேபோன்று நளினியும் தனது மாமாவின் முகத்தை வீடியோகால் மூலமாக பார்க்க அனுமதிக்க கோரிக்கை விடுத்து உள்ளார். ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.

கடிதம் கொடுக்கவில்லை

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தந்தையின் முகத்தை வீடியோகால் மூலம் பார்க்க அனுமதிக்கோரி முருகன் சிறைத்துறை நிர்வாகத்துக்கு கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. அதேபோன்று நளினியும் கடிதம் அளிக்கவில்லை. உயிரிழந்த வெற்றிவேலின் உடலை வீடியோகால் மூலம் முருகன், நளினி ஆகியோர் பார்ப்பதற்கு உயர் அதிகாரிகள் தான் அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story