மீண்டும் சிவப்பு நிற மண்டலத்துக்கு மாறியது ராணிப்பேட்டை மாவட்டம் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று எதிரொலி


மீண்டும் சிவப்பு நிற மண்டலத்துக்கு மாறியது ராணிப்பேட்டை மாவட்டம் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று எதிரொலி
x
தினத்தந்தி 1 May 2020 4:22 AM GMT (Updated: 1 May 2020 4:22 AM GMT)

வெளிமாநிலத்தில் இருந்து வந்தருக்கு கொரோனா தொற்று இருப்பதால், ஆரஞ்சு நிற மண்டலத்தில் இருந்து மீண்டும் சிறப்பு நிற மண்டலத்துக்கு ராணிப்பேட்டை மாவட்டம் மாறியுள்ளது.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 16 நாட்களாக புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை. இதனால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு நிற மண்டலத்துக்கு மாறியது. இந்த நிலையில் நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்த 58 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆரஞ்சு நிற மண்டலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் மீண்டும் சிவப்பு நிற மண்டலத்துக்கு மாறியுள்ளது.

அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வந்ததன் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவித தளர்வுகளும் இல்லை. தற்போதுள்ள நிலையே தொடரும்.

வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு யாரேனும் வந்திருந்தால் உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிக்காத பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகளை தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டும்.

முகக் கவசம் அணிந்து

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக உள்ள ஒருசில இடங்களில் 28 நாட்கள் கால அவகாசம் முடியும் தருவாயில் உள்ளது. அந்தப் பகுதிகளில் மட்டும் அத்தியாவசியத் தேவைகள், பொருட்கள் கிடைக்க ஒருசில தளர்வுகள் ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக விலகலையும் பின்பற்ற வேண்டும்.

மாவட்டத்தில் 1,874 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,388 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை, 446 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் மதியம் ஒரு மணிக்குமேல் எந்தக் காரணமுமின்றி சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் என 3 ஆயிரத்து 700-க்குமேல் வழக்குப் பதிவு செய்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் போலீசாருடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற துணை ராணுவத்தினர் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம். இதுவரை 36 பேர் போலீசாருடன் இணைந்து பணியாற்ற வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story