டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு: தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டம்


டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு: தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 7 May 2020 11:00 PM GMT (Updated: 7 May 2020 8:50 PM GMT)

டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வீடுகளில் இருந்து போராட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு, 

டாஸ்மாக் கடைகள் நேற்று காலை முதல் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

ஊரடங்கு நேரத்திலும் வீடுகளில் இருந்தபடி டாஸ்மாக் வேண்டாம் என்று பதாகைகளை பிடித்தபடி பலரும் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்தனர். இது டாஸ்மாக் கடைக்கு எதிரானவர்களிடம் அதிக கவனத்தை பெற்றது. அதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினரும் இந்த போராட்டத்தை கையில் எடுத்தனர். தி.மு.க. கூட்டணி கட்சியினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்று ஆங்காங்கே இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுபோல் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் இருந்தே டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஈரோட்டில் நேற்று தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.வினர் சிலர் கருப்பு சட்டை அணிந்து வந்து தமிழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஆ.செந்தில்குமார் தலைமையில் அவரது வீட்டின் முன்பு அந்த பகுதி நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்க்குமரன், ஈரோடு சூளை எஸ்.எஸ்.பி. நகர் பகுதியில் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

கொ.ம.தே.க.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், ஈரோடு சம்பத்நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, முக்கிய நிர்வாகிகள் ஜெகநாதன், கொங்கு கோவிந்தராஜன் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். அனைவரும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர்.

காங்கிரஸ்

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கையில் கருப்பு குடை பிடித்தபடி நின்று கோஷங்கள் எழுப்பினார்கள். முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன் மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பட்டை அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பூவைராஜன், பொருளாளர் ரவி, சிறுபான்மைத்துறை நிர்வாகிகள் வினோத்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story