நெல்லையில் தடையை மீறி இயங்கிய இறைச்சி கடைகள் அகற்றம்: நுங்கு, இளநீர் விற்கவும் தடை


நெல்லையில் தடையை மீறி இயங்கிய இறைச்சி கடைகள் அகற்றம்: நுங்கு, இளநீர் விற்கவும் தடை
x
தினத்தந்தி 7 May 2020 10:15 PM GMT (Updated: 7 May 2020 9:21 PM GMT)

நெல்லையில் தடையை மீறி இயங்கிய இறைச்சி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். மேலும் நுங்கு, இளநீர் விற்கவும் தடை விதித்தனர்.

நெல்லை, 

நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் செயல்பட்ட ஆடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

அந்த கடை உரிமையாளர்கள் பாளையங்கோட்டை பெல் மைதானம், டவுன் ஆர்ச் ரோடு, கண்டியப்பேரி உழவர் சந்தை ஆகிய இடங்களில் கடைகள் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதை மீறி செயல்படும் கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் தடையை மீறி பன்றி இறைச்சி கடைகள் நேற்று செயல்பட்டன. இதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, பன்றி இறைச்சி கடைகளை அகற்றினர். மேலும் அங்கு உடனடியாக கிருமி நாசினியும் தெளிக்கப்பட் டது.

இதேபோல் டவுன் குற்றாலம் ரோட்டில் திறக்கப்பட்டிருந்த ஆடு இறைச்சி கடையையும் அதிகாரிகள் மூடினர். அங்கிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி எதிரே செயல்பட்ட டீ, ஸ்நாக்ஸ் கடையையும் அதிகாரிகள் மூடினர்.

பாளையங்கோட்டை வி.எம். சத்திரத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் லோடு ஆட்டோவில் நுங்கு, இளநீர், பழங்கள் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதைக்கண்ட மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரத்துக்கு தடை விதித்து, உடனடியாக அவற்றை ஆட்டோவில் திரும்ப எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

Next Story