விக்கிரவாண்டி அருகே கூடுதலாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தும் மையத்தில் அதிகாரி ஆய்வு


விக்கிரவாண்டி அருகே கூடுதலாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தும் மையத்தில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 10 May 2020 10:43 PM GMT (Updated: 10 May 2020 10:43 PM GMT)

விக்கிரவாண்டி அருகே கூடுதலாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தும் மையத்தில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி வட்டாரத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து விக்கிரவாண்டி பகுதிக்கு வந்த தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூர், மயிலம், கெங்கராம்பாளையம் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அடிப்படை வசதிகள்

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக தனிமைப்படுத்தும் மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வி.சாலையில் உள்ள பேட்ரிக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டு, அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் நடைபெற்று வருகின்றனர். மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியை மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி திட்ட அலுவலர் குருசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்த கோபாலகிருஷ்ணன், எழிலரசு, செயற்பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் ஜெயலட்சுமி, பணி மேற்பார்வையாளர் தண்டபாணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவரம்பன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர் . 

Next Story