10-ம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


10-ம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 13 May 2020 11:45 PM GMT (Updated: 13 May 2020 8:22 PM GMT)

10-ம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

டி.என்.பாளையம், 

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள இருட்டிபாளையம் கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, 2 ஆயிரம் பேருக்கு அரிசி, பருப்பு, போன்ற பொருட்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மலைப்பகுதியில் வசித்தாலும் அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்து தரப்படும். தேர்வு எழுதிய பின்னர் அவர்களை பஸ் மூலம் வீட்டுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும். நன்றாக தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

மேலும் நிருபர்கள் அமைச்சரிடம், ‘மலை கிராமங்களில் போதிய ஆன்லைன் வசதி இல்லாதபோது அவர்கள் தேர்வுக்கு தயாராகாத சூழ்நிலையில் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது குறித்து என்ன கூறுகிறீர்கள்’? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர், ‘ஏதாவது காரணம் காட்டி தேர்வை தள்ளி வைத்தால் எப்போது 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிட முடியும் என நீங்களே கூறுங்கள்’ என்றார்.

Next Story