ஈரோட்டில் குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துண்டுகள் எரிந்து நாசம்


ஈரோட்டில் குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துண்டுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 15 May 2020 11:00 PM GMT (Updated: 15 May 2020 7:56 PM GMT)

ஈரோட்டில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துண்டுகள் எரிந்து நாசம் ஆனது.

ஈரோடு, 

ஈரோடு கருவில்பாறைவலசு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 64). துண்டு வியாபாரி. இவருக்கு சொந்தமான குடோன் அதே பகுதியில் உள்ளது. அங்கு அவர் துண்டுகளை இருப்பு வைத்திருந்தார். கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வடிவேல் தன்னுடைய குடோனில் இருந்த துண்டுகளை எடுக்காமல் அங்கேயே வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் இவருடைய துண்டு குடோனில் இருந்து கரும்புகை வந்தது. அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் குடோன் தீப்பற்றி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அதிகாரி மயில்ராஜ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் குடோனில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. அதனால் சம்பவ இடத்துக்கு மேலும் 2 பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டு குடோனின் சுவர் இடிக்கப்பட்டது.

அதன் பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் குடோனுக்குள் புகுந்து துண்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும் குடோனில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துண்டுகள் தீயில் கருகின.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story