விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா


விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 May 2020 4:13 AM GMT (Updated: 21 May 2020 4:13 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 7 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம்,  

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி வரை கொரோனா வைரஸ் நோயால் 311 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நேற்று முன்தினம் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. 

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வரப்பெற்றது. இதில் மேலும் 7 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்கள்.  

இவர்களில் திண்டிவனம் பள்ளிப்பாக்கத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒரு தொழிலாளியும், 29 வயதுடைய அவரது மனைவியும், 7 வயதுடைய அவர்களது மகளும், 3 வயதுடைய அவர்களது மகனும் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய மற்றொரு தொழிலாளியும், 12 வயதுடைய அவரது மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களை தவிர விழுப்புரம் அருகே வ.பாளையத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போக்குவரத்து போலீஸ்காரரின் தாய் ஆவார். 

இதையடுத்து இவர்கள் 7 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள், உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது.  

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் மட்டும் இறந்துள்ளனர். 

நேற்று முன்தினம் வரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 286 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 6 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். மீதமுள்ள 24 பேர் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

வெளிமாநிலங்களில் இருந்து வந்த 73 பேர் 4 மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டும், கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 991 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றனர்.

Next Story