கும்மிடிப்பூண்டி அருகே கொரோனா வைரசால் ஒருவர் சாவு


கும்மிடிப்பூண்டி அருகே கொரோனா வைரசால் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 26 May 2020 11:45 PM GMT (Updated: 26 May 2020 8:36 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி, 

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏ.என்.குப்பம் ஊராட்சியை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்த 51 வயது ஆண், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர், நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக அந்த கிராமத்துக்கு சென்ற மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன், கிராம மக்களில் ஒரு சிலர் மருத்துவ குழுவினரை விரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் இறந்தவர் உடலை தங்களது கிராமத்துக்கு கொண்டு வந்து இறுதி சடங்கு செய்திடவேண்டும் எனவும் தெரிவித்தனர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் பதற்றமான சூழ்நிலை உருவானது.

இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று இரவு கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் குமார் தலைமையில், வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஏ.என்.குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு வினாயகம் தலைமையில் கிராம பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது குடும்ப உறுப்பினர்கள் 10 பேர், சென்னை சென்று இறந்தவருக்கு அங்கேயே இறுதிச்சடங்கு செய்திடமுடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த கிராமத்தில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story