நாமக்கல் அருகே நிலத்தரகர் கொலையில் 5 பேர் கைது


பூபதி, ராஜமுருகன், கணேசன், ராமச்சந்திரன், ரூபன்தாஸ்.
x
பூபதி, ராஜமுருகன், கணேசன், ராமச்சந்திரன், ரூபன்தாஸ்.
தினத்தந்தி 29 May 2020 2:18 AM GMT (Updated: 29 May 2020 2:18 AM GMT)

நாமக்கல் அருகே நிலத் தரகர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


மோகனூர்,

நாமக்கல் அருகே என்.புதுப்பட்டி பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ந் தேதி 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு சென்று பிணத்தை கைப்பற்றிய மோகனூர் போலீசார், அடையாளம் தெரியாத பிணம் என்ற வகையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் யார்? எந்த ஊர்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என புகார் கொடுக்க சென்ற முசிறி அருகே உள்ள தாதம்பட்டியை சேர்ந்த மைதிலி (வயது 34) என்ற பெண், அங்கு இருந்த அடையாளம் தெரியாத பிணங்களின் படத்தை பார்த்து அதில் ஒருவர் தனது கணவராக இருக்கலாம் என சந்தேகப்பட்டார். பின்னர் மோகனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து இறந்தவரின் படத்தை பார்த்து இது எனது கணவர் நிலத்தரகர் சரவணன் (40) என கூறினார்.

மேலும் தனது கணவருக்கும், முசிறி பகுதியை சேர்ந்த ஒரு சிலருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை இருந்ததாகவும், இதுகுறித்து அவர்களை விசாரிக்க வேண்டும் எனவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி மோகனூர் போலீசில் அவர் புகார் கொடுத்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.

இந்நிலையில் மோகனூர் அருகே உள்ள எம்.மேட்டுபட்டியில் இன்ஸ்பெக்டர் சுகுமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது காரில் வந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தார். இதில் காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் முசிறி அருகே உள்ள சிட்டிலறையை சேர்ந்த ரத்தினம் மகன் பூபதி (37), காரை ஓட்டி வந்த டிரைவர் முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்த துரைசாமி மகன் கணேசன் (34), முசிறி பாலதோப்பு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் ராஜமுருகன் (30), முசிறியை சேர்ந்த ராமச்சந்திரன் (45), ரூபன்தாஸ் (35) என்பதும், நிலத்தரகர் சரவணன் கொலையில் இவர்களுக்கு தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய மேல் விசாரணையில் கிடைத்த தகவல்கள் விவரம் வருமாறு:-

நிலத்தரகர் சரவணன் வேலை வாங்கி தருவதாக கூறி, பூபதியிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இது குறித்து பூபதி தன் நண்பர்களிடம் கூறி, சரவணனை பிடித்து பணத்தை வசூல் செய்து தருமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இருந்த சரவணனை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி, பூபதியின் தூண்டுதலின் பேரில் அவரது நண்பர்கள் கடத்தி வந்து நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே செல்லிபாளையத்தில் உள்ள பூபதி உறவினர் விவசாய தோட்டத்தில் வைத்து விசாரித்து உள்ளனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பூபதியின் நண்பர்கள் சரவணனை சரமாரியாக அடித்துள்ளனர். அதில் சரவணன் இறந்து போனார். இதையடுத்து சரவணனின் உடலை காரில் கொண்டு வந்து என்.புதுப்பட்டி பகுதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர். மேற்கண்ட விவரங்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பூபதி, கணேசன், ராஜமுருகன், ராமச்சந்திரன், ரூபன்தாஸ் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட முசிறியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலையுண்ட சரவணனுக்கு 12 வயதில் லோகேஸ்வரி என்ற 6-ம் வகுப்பு படிக் கும் மகளும், 7 வயதில் நிரஞ்சன் என்ற ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story