திருபுவனையில் பயங்கரம்; தனியார் வங்கி ஊழியர் கழுத்தை அறுத்துக் கொலை


திருபுவனையில் பயங்கரம்; தனியார் வங்கி ஊழியர் கழுத்தை அறுத்துக் கொலை
x
தினத்தந்தி 4 Jun 2020 11:27 PM GMT (Updated: 4 Jun 2020 11:27 PM GMT)

திருபுவனையில் தனியார் வங்கி ஊழியர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசில் அவரது மைத்துனர் உள்பட 3 பேர் சிக்கினர்.

திருபுவனை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மாடாம்பூண்டி கூட்டுரோட்டை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 22). அங்குள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருபுவனைக்கு மாற்றப்பட்டார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

அப்போது அதே வங்கியில் வேலை பார்த்து வந்த திருபுவனை பாளையத்தை சேர்ந்த காயத்ரி (20) என்பவரை ராஜேஷ்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்பின் தனது மனைவி காயத்ரியுடன் ராஜேஷ்குமார் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். தற்போது அவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி திருபுவனையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு குழந்தையுடன் காயத்ரி வந்தார். அதன்பின் அவர் கணவரின் வீட்டுக்கு செல்லாமல் இங்கேயே இருந்து விட்டார்.

இந்தநிலையில் ராஜேஷ்குமார் திருபுவனைக்கு வந்து தனது மனைவி, குழந்தையை பார்த்து விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதேபோல் நேற்று முன்தினமும் மனைவியை பார்க்க ராஜேஷ்குமார் திருபுவனைக்கு வந்திருந்தார். அப்போது அவரும், காயத்ரியின் அண்ணன் செல்வராஜும் மது குடிப்பதற்காக சென்றதாக தெரிகிறது. ஆனால் இரவு முழுவதும் அவர்கள் வீடு திரும்பவில்லை.

திருபுவனை பாளையம் மல்லிகை நகர் பகுதியில் உள்ள சவுக்கு தோட்டத்தில் நேற்று காலை ராஜேஷ்குமார் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவலறிந்து காயத்ரி அலறியடித்தபடி சம்பவ இடத்துக்கு ஓடினார். அங்கு கிடந்த கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

இந்த கொலை சம்பவம் பற்றி அறிந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மற்றும் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். ராஜேஷ்குமாரின் உடலை அங்கிருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் காயத்ரியின் அண்ணன் செல்வராஜ் தலைமறைவானது தெரியவந்தது. போலீசார் அவரை தேடிவந்த நிலையில் செல்வராஜ் உள்பட 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.

Next Story