விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதை கண்டித்து பருத்தி விவசாயிகள் சாலை மறியல்


விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதை கண்டித்து பருத்தி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Jun 2020 1:05 AM GMT (Updated: 16 Jun 2020 1:05 AM GMT)

விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதை கண்டித்து பருத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்திய பருத்தி கழக அதிகாரி இளங்கோவன் மற்றும் நாகை, திருவாரூர், விழுப்புரம் காரைக்கால், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.5ஆயிரத்து 550 என்றும், குறைந்தபட்சமாக ரூ.3 ஆயிரத்து 300 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதிக விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் விற்பனை கூடம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது விற்பனை கூடத்தில் எலக்ட்ரானிக் தாரசு மற்றும் ஈரப்பதம் அளக்கும் கருவி பயன்படுத்தாததை கண்டித்தும், குறைவாக விலை நிர்ணயிக்கப்பட்டதை கண்டித்தும் விவசாயிகள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் வித்யா ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா முருகன், துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்செல்வன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் சீனிவாசன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வருகிற புதன்கிழமை மறு ஏலம் நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அந்த பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story