அரியலூர் மாவட்டத்தில் 6,597 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை கண்காணிப்பு அதிகாரி தகவல்


அரியலூர் மாவட்டத்தில் 6,597 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை கண்காணிப்பு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2020 10:37 PM GMT (Updated: 27 Jun 2020 10:37 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 6,597 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி தெரிவித்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட கொரோனோ வைரஸ் கண்காணிப்பு அதிகாரி சரவணவேல்ராஜ், கலெக்டர் ரத்னா, குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசு தலைமை கொறடா பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த 26-ந் தேதி வரை மாவட்டத்தில் 384 பேருக்கு நேரடி தொற்றாகவும், 70 பேருக்கு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 392 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். எந்தவொரு அறிகுறிகள் இருந்தாலோ பொதுமக்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

585 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி சரவணவேல்ராஜ் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வருகை புரிபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 28 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் 585 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 6,597 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) இளவரசன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story