திருச்சியில் கிராம நிர்வாக அதிகாரி உள்பட 32 பேருக்கு கொரோனா 56 பேர் ‘டிஸ்சார்ஜ்’


திருச்சியில் கிராம நிர்வாக அதிகாரி உள்பட 32 பேருக்கு கொரோனா 56 பேர் ‘டிஸ்சார்ஜ்’
x
தினத்தந்தி 28 Jun 2020 1:16 AM GMT (Updated: 28 Jun 2020 1:16 AM GMT)

திருச்சியில் கிராம நிர்வாக அதிகாரி உள்பட 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருச்சி,

திருச்சியில் கொரோனா தாக்குதலின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சோமரசம்பேட்டையை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர், விமானம் மூலம் வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் சேதுராப்பட்டி பொறியியல் கல்லூரி மையத்தில் சுழற்சி முறையில் பணியாற்றினார். கடந்த 22, 23-ந் தேதிகளில் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் வருவாய் தீர்வாயம் கிராம கணக்குகளை தணிக்கை செய்தபோது சோமரசம்பேட்டை கிராம நிர்வாக அலுவலருடன் மற்ற வருவாய்த்துறை அலுவலர்களும் தொடர்பில் இருந்துள்ளனர்.

இவருக்கு கடந்த 24-ந் தேதி அவருக்கு காய்ச்சல் காரணமாக ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். சம்பந்தபட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் முறையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் உள்ள வருவாய்த்துறையினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.

மேலும் 31 பேருக்கு தொற்று

திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 503 ஆக உயர்ந்தது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட 31 பேருக்கும், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி வயலூர் ரோடு, இரட்டை வாய்க்கால், மேலப்புதூர், சந்துக்கடை மற்றும் மணப்பாறை, லால்குடி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதுவரை 199 பேர் பூரண குணமாகி வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 34 பேர், பெரம்பலூர்-3, மதுரை-1, கடலூர்-2, அரியலூர்-3 மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்த 13 பேர் என மொத்தம் 56 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Next Story