பெங்களூருவில் சளி-காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு


பெங்களூருவில் சளி-காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 28 Jun 2020 2:45 AM GMT (Updated: 28 Jun 2020 2:45 AM GMT)

பெங்களூருவில் சளி-காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

இதுகுறித்து சமூக நலத்துறை கமிஷனரும், பெங்களூரு கொரோனா தடுப்பு செயல்படை (பரிசோதனை) தலைவருமான ரவிக்குமார் சுரபுரா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகர் பகுதியில் மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்கள், சளி-காய்ச்சல் உள்ளவர்கள், நோய் முற்றிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். இதனால் நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டாலும், மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன. அதனால் பெங்களூருவில் கடந்த 10 நாட்களாக சளி-காய்ச்சலுடன் மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்த பிரச்சினை இருப்பவர்கள் முதலில் காய்ச்சல் மையங்களுக்கு வர வேண்டும். அங்கு உடல் பரிசோதனை முடிந்த பிறகு, அங்குள்ள டாக்டர் பரிந்துரைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெங்களூருவில் 52 அரசு காய்ச்சல் மையங்கள், 65 தனியார் காய்ச்சல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த மையங்களில் கொரோனா பரிசோதனைக்கு தேவைப்படும் சளி மாதிரியும் சேகரிக்கப்படுகிறது.

அரசு மையங்களில் சளி மாதிரி சேகரிப்புக்கு கட்டணம் கிடையாது. காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், காய்ச்சல் மையங்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும். ஒருவேளை தங்களிடம் சளி மாதிரி சேகரிக்க போதுமான வசதிகள் இல்லாத நிலையில், அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மையங்களுக்கு அனுப்பி சளி சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ரவிக்குமார் சுரபுரா தெரிவித்துள்ளார்.

Next Story