சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த சம்பவம் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த சம்பவம் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்ட வியாபாரியும், அவரது மகனும் உயிரிழந்த சம்பவம்பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சேலம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ்.

தந்தை-மகன் சாவு

கடந்த 19-ந் தேதி இரவில் ஜெயராஜிடம் போலீசார் கடையை அடைக்கச் சொன்னதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, போலீசார் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஜெயராஜை தேடி அவரது மகன் பென்னிக்சும் அங்கு சென்றார். அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், பின்னர் கோவில்பட்டி சப்-ஜெயில் அடைத்தனர். அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தந்தை-மகன் இருவரும் இறந்துவிட்டனர்.

போலீசார் தாக்கியதில் தந்தையும், மகனும் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கண்டனம்

வியாபாரியும், அவரது மகனும் சிறையில் மரணம் அடைந்தது தொடர்பாக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மற்ற போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்கும் வகையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.

ஜெயராஜ் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கியுள்ள தமிழக அரசு, அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ஜெயராஜின் மனைவி செல்வராணி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் ஐகோர்ட்டும் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்தது. கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் சாத்தான்குளத்தில் தங்கி இருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா ஆகியோர் நேற்று முன்தினம் கோவில்பட்டி சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிறையில் இருந்த ஆவணங்களையும், கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இந்த நிலையில், தந்தை-மகன் இறந்தது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே பெரிய அளவில் அமைக்கப்படும் நவீன கால்நடை பூங்கா கட்டுமான பணிகளை நேற்று பார்வையிட்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடையை மூடுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில்பட்டி கிளைச்சிறையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். அப்போது, இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து உள்ளனர்.

சி.பி.ஐ. விசாரணை

இதுகுறித்து ஐகோர்ட்டு மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணைக்கு வரும் போது இதை தெரிவித்து, கோர்ட்டு அனுமதி பெற்று சி.பி.ஐ.யிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படும்.

ஏற்கனவே காவல்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம், வியாபாரிகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பிரச்சினை என்றால் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் தேவையில்லாமல் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story