கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Jun 2020 2:17 AM GMT (Updated: 29 Jun 2020 2:17 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை கிடைத்த பரிசோதனை முடிவுகளின் படி மேலும் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஓசூர் பத்தலப்பள்ளி பாலாஜி நகரில் உள்ள 29 வயது ஆண் தனியார் ஆய்வகத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஓசூர் சாய் கோல்டன் சிட்டி பகுதியை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சூளகிரி அண்ணா நகர் 50 வயது ஆண், ஓசூர் பழைய மத்திகிரியை சேர்ந்த 56 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதே போல பர்கூரை சேர்ந்த 24 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உள்ளது. திருப்பத்தூரில் இருந்து வந்தவர்கள் மூலம் இவருக்கு கொரோனா பரவி உள்ளது. இதைத்தவிர அரியானா மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தில் இருந்து ஓசூர் வந்த 22 வயது ஆண், சத்தீஸ்கர் மாநிலம் நாராயணப்பூரில் இருந்து ஓசூர் வந்த 26 வயது ஆண், கர்நாடக மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து ஓசூர் வந்த 38 வயது ஆண், 42 வயது ஆண், ஐதராபாத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த 38 வயது ஆண், 21 வயது ஆண், 40 வயது ஆண் உள்பட 4 ஆண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 14 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில் கொரோனா தொற்று 123 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 137 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஓசூர் சிப்காட்டில் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 2 அதிகாரிகள் உள்பட 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் அங்கு வேறு யாருக்கும் கொரோனா பரவி உள்ளதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story