கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 155 பேருக்கு கொரோனா


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 155 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Jun 2020 2:59 AM GMT (Updated: 29 Jun 2020 2:59 AM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 155 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக நேற்று முன்தினம் வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 552 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று 200-க்கும் மேற்பட்டோரின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது.

இதில் ஒரே நாளில் புதிய உச்சமாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 14 பேர் சென்னை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பதால், அவர்களின் பெயர் பட்டியல் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கொரோனா பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

355 பேர் குணமடைந்தனர்

இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 155 ஆக உள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 552-ல் இருந்து 707 ஆக உயர்ந்துள்ளது. 355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். இதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை 767 பேர் கொரோனாவால் பதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 466 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 14 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் முண்டியம்பாக்கம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

இதற்கிடையே நேற்று சிலரது உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தின் ஒட்டு மொத்த பாதிப்பு 814 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 231 பேர் தீவிர கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர்.

Next Story