பணியின்போது 33 பேர் பாதிப்பு: கொரோனா அச்சத்துடன் பணியாற்றும் போலீசார்


பணியின்போது 33 பேர் பாதிப்பு: கொரோனா அச்சத்துடன் பணியாற்றும் போலீசார்
x
தினத்தந்தி 29 Jun 2020 3:33 AM GMT (Updated: 29 Jun 2020 3:33 AM GMT)

தேனி மாவட்டத்தில் 33 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் அச்சத்துடன் பணியாற்றும் நிலைமை உருவாகி உள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று வரை மாவட்டத்தில் 33 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் சென்னை, மதுரையில் இருந்து உடல் நலக்குறைவால் விடுமுறையில் தேனிக்கு வந்தவர்கள். 31 பேர் தேனி மாவட்டத்தில் பணியின் போது பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் எதிரொலியாக சின்னமனூர், போடி நகர், கம்பம் தெற்கு ஆகிய போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. போலீசார் பாதிக்கப்படுவதோடு, போலீசாரின் குடும்பத்தினரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், மாவட்டத்தில் போலீசாரிடையே கொரோனா குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்ட போதிலும் மக்கள் இயல்பாக சாலைகளில் உலா வருகின்றனர்.

கொரோனா விழிப்புணர்வு

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் வாங்கச் செல்வதாகவும் கூறி காலை முதல் இரவு வரை சாலைகளில் மக்கள் சுற்றித் திரிகின்றனர். மாவட்டத்தில் போலீசாருக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் பணியில் இருக்கும் போலீசாரிடம் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “மக்களிடம் இன்னும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை. போலீசாருக்கு தான் பாதிக்கப்படுவோம் என்பதை விடவும், தங்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் தான் அதிகம் ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை நீடித்தால் போலீசார் மேலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

எனவே மக்கள் ஒத்துழைப்பு அவசியம் ஆகும். தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தினம் தினம் வாங்குவதை தவிர்த்து, ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றனர்.

Next Story