கொரோனா அச்சத்தால் வெறிச்சோடிய திருப்பூர்


கொரோனா அச்சத்தால் வெறிச்சோடிய திருப்பூர்
x
தினத்தந்தி 29 Jun 2020 4:09 AM GMT (Updated: 29 Jun 2020 4:09 AM GMT)

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையொட்டி திருப்பூர் மாநகரம் நேற்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பூர்,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. நாளுக்கு நாள் வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் நோய் குறித்த விழிப்புணர்வும் போதிய அளவில் இல்லாததால் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் உள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தினந்தோறும் அதிகரித்து வருவதால் மக்களிடையே இந்த வைரஸ் மீதான அச்சம் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று வெளியிடங்களில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த அளவே காணப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களின் கூட்டமும் அதிக அளவில் இருக்கும்.

வெறிச்சோடியது

அதேபோல் பழைய பஸ் நிலையம் புது மார்க்கெட் வீதி பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். ஆனால் நேற்று காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகியவை இடமாற்றம் செய்யப்பட்டதால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், புதுமார்க்கெட் வீதியும் மக்கள் நடமாட்டம் இன்றி இருந்தது. இதனால் வியாபாரிகள், வணிகர்கள் போதிய வியாபாரம் இன்றி தவித்தனர். நேற்று மாலை பெய்த திடீர் மழையாலும் பொதுமக்களின் நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது.

இதேபோல் பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் வெளியிடங்களில் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்த்தல், மற்றும் அரசு சார்பில் அறிவிக்கப்படும் நடைமுறைகளை பின்பற்றினால் இந்த கொரோனாவில் இருந்து விரைவில் மீளலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.


Next Story