கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 July 2020 1:20 AM GMT (Updated: 18 July 2020 1:20 AM GMT)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் நகர செயலாளர் ஆசாத் தலைமை தாங்கினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உண்மையான பெயர் பட்டியலை வெளியிட வேண்டும். கொரோனா பரிசோதனை செய்வோரை தனிமைப்படுத்தி, கொரோனா நோயாளிகளுக்கு தரமான சத்துள்ள உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும். மேலும் கொரோனா வார்டு, கழிப்பறையை தூய்மையாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதேபோல் தோட்டனூத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் அஜாய்கோஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன் தலைமையில் நத்தம் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. குஜிலியம்பாறையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய அனைத்து தாலுகாவிலும் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story