திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை


திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 24 July 2020 11:00 PM GMT (Updated: 24 July 2020 8:10 PM GMT)

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கடந்த 1995-ம் ஆண்டு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரால் தரமான கல்வியை இந்த சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அனைத்து வசதிகளையும் கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

கல்லூரியில் 6 துறைகளில் இளநிலை பட்டப்படிப்பும், முதுநிலை பட்டப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது. கல்லூரியானது என்.பி.ஏ. மற்றும் டி.சி.எஸ். அங்கீகாரம், ஐ.எஸ்.ஓ. 9001:2015 தரச்சான்றிதழ் பெற்று இருக்கிறது. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சித்துறை, இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத்துறைக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.

இக்கல்லூரி தரமான கல்வி வழங்குவதுடன் மட்டுமின்றி, மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை கொண்டு வேலைவாய்ப்பு வழங்க பல வழிகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக பிரத்யேகமான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்களுக்கு எழுத்து திறன், சிந்தனை திறன், மாதிரி தேர்வு ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி அளித்து, பன்னாட்டு நிறுவனங்களில் வளாகத்தேர்வு மூலம் பணியமர்த்தப்படுகின்றனர்.

கல்லூரியில் நவீன ஆய்வுக்கூடங்கள் அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது. மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க கணினிமயமாக்கப்பட்ட நூலக வசதி உள்ளது. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது மட்டுமின்றி, அவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும் விதமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் தொழில் நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய துறைசார்ந்த அறிவு, தகவல் தொடர்பு, முடிவெடுக்கும் ஆற்றல் போன்ற திறன்களை மேம்படுத்தி கொள்ள வழிவகுக்கிறது. மேலும் மாணவர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான இணைப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஆண்டுதோறும் மாநில அளவிலான மனிதவள சந்திப்பு நடத்தப்படுகிறது.

கணினி அறிவியல் பொறியியல் துறை, மின்னணு தகவல் தொடர்பு பொறியியல் துறை ஆகியவை அண்ணா பல்கலைக்கழகத்தால் ஆராய்ச்சி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் 30-க்கு மேற்பட்ட முனைவர் பட்டம் பெற்ற அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஏ.ஐ.சி.டி.இ., டி.ஆர்.டி.ஓ., சி.எஸ்.ஆர்.ஐ., டி.என்.சி.எஸ்.டி., பி.ஐ.ஆர்.ஏ.சி., ஐ.இ.ஐ. போன்ற பல்வேறு நிறுவனங்களால் சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி அளிக்கப்பட்டு பல்வேறு ஆய்வு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வழிகாட்டுதலின்படி, பல்வேறு நிதி அளிக்கப்பட்ட ஆய்வு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில் மூலமாக மீன்பிடி மண்டலம் பற்றிய ஆய்வு, கடலோர பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மன்னார் வளைகுடாவின் ஆழ்கடல் பகுதியில் தொலை உணர்வு தரவுகளைப் பயன்படுத்தி வண்டல் பகுப்பாய்வு என்ற ஆய்வு திட்டத்திற்காக நிதியளிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில் மூலமாக மாணவர் ஆய்வு திட்டத்தின் கீழ் ‘ஸ்கிசோபெர்னியா’வின் நிலைகளை பகுப்பாய்வு செய்வதற்கான ஆய்வு திட்டத்திற்காக மாணவி அஜிதாவுக்கு நிதி பெறப்பட்டது.

மின் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் மணிமாலா வழிகாட்டுதலின்படி, ஐ.இ.ஐ. ஆர்.டி. மாணவர் திட்டத்தின் கீழ் ‘முழுமையாக தானியங்கி சூழல் நட்பு சூரிய புல்வெட்டிகள்’ என்ற ஆய்வு திட்டத்திற்காக மாணவிகள் கனக சவீதா, பிருந்தா, மதுமிதா ஆகியோருக்கு நிதியளிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியர் கமலமலர் வழிகாட்டுதலின்படி, மாணவர் ஆய்வு திட்டத்தின் கீழ் ‘ஐ.ஓ.டி. அடிப்படையிலான மீன் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு’ என்ற ஆய்வு திட்டத்திற்காக மாணவி அஜிதாவுக்கு நிதியளிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

மின்னணுவியல் மற்றும் தொடர்பு துறை உதவி பேராசிரியர் திலகவதி வழிகாட்டுதலின்படி, டி.என்.எஸ்.சி.எஸ்.டி. மாணவர் திட்டத்தின் கீழ் ‘சாலை விபத்துக்களைக் கண்டறிந்து கணிப்பதன் மூலம் மக்களைப் பாதுகாப்பதற்கான திறமையான நுட்பங்கள்’ என்ற ஆய்வு திட்டத்திற்காக மாணவிகள் சண்முகபிரியா, சுபலட்சுமி, சுஷ்மிதா குமாரி, வேம்புலட்சுமி ஆகியோருக்கு நிதியளிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. மேலும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் நிதி பெறப்பட்டது.

கல்லூரியில் மாணவர்களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் நவீன வசதிகளுடன் உள்ளன. கல்லூரி மற்றும் விடுதி வளாகம் முழுவதும் ‘வை-பை’ கணினி சேவை வசதி கொண்டுள்ளது. கல்லூரியில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, சாயர்புரம், சாத்தான்குளம், திசையன்விளை, நாசரேத், உடன்குடி உள்ளிட்ட இடங்களுக்கும், கல்லூரிக்கு அருகில் உள்ள இடங்களுக்கும் 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், படிப்புகள் குறித்த விவரங்களை பெற drsacoe@aei.edu.in, princyengg@aei.edu.in ஆகிய மின்னஞ்சல்கள் மூலமாகவும், அல்லது கல்லூரி முதல்வரை நேரிலோ அல்லது 04639-220715, 220702, 220700, 94432 46150 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story