மத்திய அரசை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் கைது


மத்திய அரசை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் கைது
x
தினத்தந்தி 27 July 2020 8:54 PM GMT (Updated: 27 July 2020 8:54 PM GMT)

ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி எழுந்துள்ள நிலையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. அக்கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் முதல்-மந்திரி அசோக் கெலாட் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் 27-ந் தேதி போராட்டம் நடத்தும்படி மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டது.

அதன்படி கர்நாடக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து பெங்களூரு விதான சவுதா அருகே உள்ள கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக கூறி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் தங்களின் கைகளில் பதாகைகளை ஏந்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

ஜனநாயக படுகொலை

மத்திய அரசு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் அரசை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி செய்துள்ளது. ஆளும் பா.ஜனதாவினர் கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசை கவிழ்த்தனர். 17 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் விலைக்கு வாங்கினர். அதே போல் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி காங்கிரஸ் அரசை கவிழ்த்தனர்.

இப்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியுள்ளனர். அதனால் அங்கு காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டசபையை கூட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கவர்னரிடம் அந்த மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் கவர்னர் வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் அமைதியாக உள்ளார். கவர்னர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அந்த மாநில கவர்னர் ஒத்துழைப்பு வழங்குகிறார். இது ஜனநாயக படுகொலை.

ஒத்துழைப்பு வழங்க மாட்டோம்

பிரதமர் மோடி சர்வாதிகாரியை போல் செயல்படுகிறார். இந்த நிலை முடிவுக்கு வர வேண்டும். கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு மனு கொடுக்க நாங்கள் அனுமதி கேட்டோம். ஆனால் கவர்னர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இது சரியல்ல. கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். இதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஊழலுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

டி.கே.சிவக்குமார் பேசுகையில், “இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. பா.ஜனதா நமது நாட்டில் ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் அரசுகளை குறுக்கு வழியில் கவிழ்க்கிறது. ஆபரேஷன் தாமரை என்ற மிக மோசமான முறையை பா.ஜனதா கடைப்பிடிக்கிறது. குதிரை பேரம் மூலம் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறார்கள். அதனால் நாங்கள் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போராட்டத்தை நடத்துகிறோம்“ என்றார்.

முகக்கவசம் அணியவில்லை

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர். பிறகு மாலையில் அவர்களை விடுதலை செய்தனர்.

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் காங்கிரஸ் நடத்திய இந்த போராட்டத்தில் பலர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story