தூத்துக்குடியில் பயங்கரம்: காதல் மனைவி கழுத்தை இறுக்கி கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது


தூத்துக்குடியில் பயங்கரம்: காதல் மனைவி கழுத்தை இறுக்கி கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது
x
தினத்தந்தி 29 July 2020 12:13 AM GMT (Updated: 29 July 2020 12:13 AM GMT)

தூத்துக்குடியில் காதல் மனைவி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். நடத்தையில் சந்தேகத்தால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஜாகீர்உசேன் நகரைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 33), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முருகவள்ளி (28). இவர்களுக்கு தமிழ்செல்வன் (6), ரபிஷியா (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

சண்முகராஜூம், முருகவள்ளியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு முன்பு சண்முகராஜ் தூத்துக்குடி இந்திரா நகரில் தங்கி இருந்தார். அப்போது விளாத்திகுளம் அருகே உள்ள நரிப்பையூருக்கு கட்டிட வேலைக்கு சென்றபோது, அந்த பகுதியை சேர்ந்த முருகவள்ளியுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு தூத்துக்குடி ஜாகீர்உசேன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

கழுத்தை இறுக்கி கொலை

முருகவள்ளி அடிக்கடி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு சண்முகராஜ் சத்தம் போட்டார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் முருகவள்ளி வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. உடனே கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு முருகவள்ளி நைலான் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தாளமுத்துநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார், முருகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சண்முகராஜ் நடத்தையில் சந்தேகப்பட்டு முருகவள்ளியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும், பின்னர் அவர் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து சண்முகராஜை போலீசார் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை கணவரே கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story