கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது


கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2020 9:08 PM GMT (Updated: 5 Aug 2020 9:08 PM GMT)

திருவொற்றியூர் கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன் என தெரிந்தது. சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் அவரை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் குப்பம் அப்பர் நகர் கன்னி கோவில் தெரு அருகே கடற்கரையில் நேற்று முன்தினம் ஆண் பிணம் கரை ஒதுங்கியது. கழுத்தை அறுத்தும், தலையில் காயமும் இருந்ததால் யாரோ அவரை கழுத்தை அறுத்தும், பலமாக தாக்கியும் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் கொலையானவர் பெயர் ஆனந்த் என்ற கருப்பு ஆனந்த் (வயது 45) என்பதும், இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.

தாய்-தந்தையை இழந்தவர்

வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே பகுதியில் உள்ள கல்பனா என்ற பெண்ணுடன் ஆனந்த், கடந்த 20 வருடங்களாக குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. அதே வீட்டில் தாய்-தந்தையை இழந்த இம்ரான் (25) என்பவரும் வசித்து வந்தார். அவர், ஆனந்த்-கல்பனா இருவரையும் அம்மா-அப்பா என்று அழைத்து வந்ததாக தெரிகிறது.

ஆனந்த் பல்வேறு குற்ற வழக்குகளில் இம்ரானையும் சேர்த்து போலீசில் சொல்லிவிடுவாராம். இதனால் இருவரும் அடிக்கடி சிறைக்கு சென்று வந்தனர். சம்பந்தமே இல்லாமல் பல வழக்குகளில் தன்னையும் போலீசில் ஆனந்த் மாட்டி விடுகிறாரே என்ற கோபத்தில் ஆனந்த் மீது இம்ரான் ஆத்திரத்தில் இருந்தார்.

கொலை

நேற்று முன்தினம் ஆனந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு கல்பனா வீட்டுக்கு வந்தார். அப்போது குடிபோதையில் இருந்த ஆனந்துக்கும், இம்ரானுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் விரட்டிச் சென்றனர்.

கடற்கரையோரம் சென்றபோது ஆனந்த் கத்தியால் இம்ரானை குத்த முயற்சி செய்தார். அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து ஆனந்த் தலையில் இம்ரான் தாக்கினார். மேலும் ஆனந்திடம் இருந்த கத்தியை பறித்து அவரது கழுத்தை அறுத்தும், சரமாரியாக குத்தியும் கொலை செய்துவிட்டு உடலை கடலில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதுபோல் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதன்பிறகு அவரது உடல் கரை ஒதுங்கியது. அதை பார்த்து மீனவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தது தெரிந்தது. இதையடுத்து இம்ரானை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story