தூத்துக்குடியில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி


தூத்துக்குடியில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 6 Aug 2020 2:11 AM GMT (Updated: 6 Aug 2020 2:11 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டார். தூத்துக்குடியில் நடைபெற்று வரும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் சளி மாதிரி சேகரிப்பு முகாம்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாநகர நல அலுவலர் அருண்குமார், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் ரேவதி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குறைவான இறப்பு விகிதம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு 1.62 சதவீதமாக உள்ளது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 0.7 என்ற அளவில் மிகவும் குறைவாகவே உள்ளது.

மாவட்டத்தில் சில பிரச்சினைகளும் உள்ளன. அந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளோம். இங்கு கூடுதல் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் பொதுமக்கள் முக கவசம் அணிவதில் சுணக்கம் உள்ளது. அனைவரும் முக கவசம் அணிந்தால்தான் இந்த நோயை தடுப்பது எளிதாகும்.

தூத்துக்குடி கடல்சார்ந்த மீனவ பகுதியாக இருப்பதால், இங்கு காய்ச்சல் முகாம்கள் அதிகளவில் நடத்தப்பட்டு தினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. அதேபோன்று சுகாதாரத்துறையினரும் நன்கு ஒத்துழைத்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

1.18 லட்சம் படுக்கைகளாக உயர்வு

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. அதன்படி 75 ஆயிரம் படுக்கைகள், 1 லட்சத்து 18 ஆயிரம் படுக்கைகளாக உயர்த்தப்பட்டு உள்ளது. அனைத்து இடங்களிலும் கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்கள், சிகிச்சை அளிக்கும் மையங்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளன. வீடுகளிலும் உரிய விதிமுறைகளின்படி, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அதேபோன்று கூடுதலாக ரூ.150 கோடி செலவில் அனைத்து தாலுகா அளவில் தனி கட்டிடத்தில் படுக்கை வசதி உள்ள ஆஸ்பத்திரிகளில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றப்படுகின்றன. இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் இன்னும் 45 நாட்களில் முடிக்க அறிவுறுத்தி உள்ளோம்.

தனியார் ஆஸ்பத்திரிகள் மீது வந்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே சில ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் 104 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். தூத்துக்குடியில் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி குறைவாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story