கோவில்பட்டியில் பெயிண்டர் கொலையில் 3 பேர் கைது


கோவில்பட்டியில் பெயிண்டர் கொலையில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2020 2:01 AM GMT (Updated: 7 Aug 2020 2:01 AM GMT)

கோவில்பட்டியில் பெயிண்டர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கோடீசுவரன் (வயது 30). பெயிண்டரான இவர் நேற்று முன்தினம் மாலையில் கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் கோடீசுவரனை வழிமறித்து, அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக கோடீசுவரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமகிருஷ்ணன் (27), காசிப்பாண்டி மகன் பாலுக்குட்டி (26), சாஸ்திரி நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளை (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

முற்றுகை

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கோடீசுவரனின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாரதிநகரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோடீசுவரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பார்வதி சண்முகசாமி, மாவட்ட செயலாளர் வக்கீல் காளசுவரன், நகர செயலாளர் கற்பகராஜ், ஒன்றிய செயலாளர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவனிடம் கோரிக்கை மனு வழங்கினர். தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story