நாகர்கோவிலில் பெண்ணை குத்திக்கொன்ற கணவர் சிறையில் அடைப்பு


நாகர்கோவிலில் பெண்ணை குத்திக்கொன்ற கணவர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2020 12:58 AM GMT (Updated: 8 Aug 2020 12:58 AM GMT)

நாகர்கோவிலில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலை கைவிடாததால் தீர்த்துக் கட்டியதாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 49). மரக்கடை அதிபர். இவருடைய மனைவி நீலாவதி (41). இவர்களுடைய மகனுக்கு 18 வயதாகிறது. ராமதாஸ் தனது மரக்கடையை வீட்டின் கீழ் தளத்தில் வைத்து நடத்தி வந்தார். வீடு மரக்கடையின் மாடியில் அமைந்திருந்தது.

நீலாவதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த ராமதாஸ் தனது மனைவியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து மேல ஆசாரிபள்ளத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவர் தனது மகனையும் உடன் அழைத்துச் சென்றார். நீலாவதி மட்டும் ஆசாரிபள்ளம் வசந்தம்நகரில் குடியிருந்து வந்தார். ராமதாஸ், தனது மனைவி வசித்து வந்த வீட்டின் கீழ்தளத்தில் மரக்கடையை தொடர்ந்து நடத்தி வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை நீலாவதி கொடூரமாக கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். வீடு முழுவதும் ரத்தமயமாக இருந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீலாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், ராமதாஸ் தனது மனைவியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராமதாசை கைது செய்தனர். மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததால் அவரை தீர்த்துக் கட்டியதாக ராமதாஸ் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

மேலும் இதுபற்றி அவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், நான் எனது குடும்பத்தினருடன் சந்தோசமாக வாழ்க்கையை நடத்தினேன். மனைவிக்கு வேறோருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்ட பிறகு எனது வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. இதனை பலமுறை கண்டித்தும் மனைவி கேட்கவில்லை. இதுதொடர்பாக எங்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

மனைவி தவறான பாதையை தேர்ந்தெடுத்ததால் அவரிடம் இருந்து விலகிச் செல்ல முடிவெடுத்தேன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து மேலஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள பூர்வீக வீட்டுக்கு சென்று விட்டேன். எதிர்காலம் கருதி மகனையும் என்னுடன் அழைத்துச் சென்று விட்டேன். ஆனால், மரக்கடையை மனைவி தங்கியிருந்த வீட்டின் கீழ்தளத்திலேயே தொடர்ந்து நடத்தி வந்தேன்.

இந்த சம்பவத்துக்கு பிறகும் எனது மனைவி கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இந்த நிலையில் கள்ளக்காதலனுடன் நீலாவதி தனிமையில் வீட்டில் உல்லாசமாக இருந்தார். தற்செயலாக மரக்கடைக்கு சென்ற எனது மகன், கள்ளக்காதலனுடன் தாய் வீட்டில் இருப்பதை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தான்.தாயின் நடத்தையை நேரில் பார்த்த மகன், என்னிடம் கூறி கதறி அழுதான். இந்த சம்பவம், மனைவி மீதான கோபத்தை மேலும் அதிகரித்தது. ஆவேசத்துடன் கத்தியை எடுத்துக் கொண்டு நீலாவதி வீட்டுக்கு சென்றேன். அந்த கத்தியால் அவரை கொலை வெறி தீரும் வரை சரமாரியாக குத்தி தீர்த்துக் கட்டினேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் ராமதாஸ் கூறியதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ராமதாசை போலீசார் நேற்று முன்தினம் இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட நீலாவதியின் உடல் நேற்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் நீலாவதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story