சேலத்தில் கொரோனாவுக்கு 168 பேர் பாதிப்பு


சேலத்தில் கொரோனாவுக்கு 168 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2020 1:47 AM GMT (Updated: 8 Aug 2020 1:47 AM GMT)

சேலத்தில் நேற்று 168 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

51 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 161 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 130 பேர், தாரமங்கலத்தில் 7 பேர், ஆத்தூரில் 6 பேர், ஓமலூரில் 5 பேர், மேச்சேரியில் 4 பேர், எடப்பாடியில் 3 பேர், பேளூரில் 2 பேர், சேலம் ஒன்றியம், கொங்கணாபுரம், வீரபாண்டி, நங்கவள்ளி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாமக்கல், திருப்பூரில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பீகாரில் இருந்து சேலம் வந்த 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 41 பேர் குணமடைந்து விட்டதால், நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


Next Story