சட்டவிரோத செயல்கள் நடந்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் போலீஸ் சூப்பிரண்டு தகவல்


சட்டவிரோத செயல்கள் நடந்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 13 Aug 2020 1:17 AM GMT (Updated: 13 Aug 2020 1:17 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் நடந்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 


தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு போலீஸ் அவசர உதவி எண் 100 மூலம் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் இன்று வரை 2 ஆயிரத்து 623 அழைப்புகள் வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதே போன்று தூத்துக்குடி மாவட்ட ‘ஹலோ போலீஸ்“ எண் 95141 44100 என்ற எண்ணிற்கு 389 அழைப்புகளும், 39 வாட்ஸ்அப் தகவல்கள் மற்றும் குறுந்தகவல்களும் வந்து உள்ளன.

தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் காவல்துறையின் அவசர உதவிக்கு எந்த நேரத்திலும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண் 100 அல்லது “ஹலோ போலீஸ்” 95141 44100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு நேரடி தகவல், குறுந்தகவல் மற்றும் வாட்ஸ்அப் தகவல் அளிக்கலாம். இந்த காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் தலைமையிலான குழு மூலம் 24 மணி நேரமும் செயல்படும். சட்டவிரோத செயல்கள் நடப்பது பொதுமக்களுக்கு தெரியவந்தால் மேற்படி எண்களுக்கு உடனடியாக புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் தருபவர்களுடைய விவரம் ரகசியமாக வைக்கப்படும். பொதுமக்களின் அழைப்புகளுக்கு போலீசார் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

கண்காணிப்பு கேமரா

இந்த கட்டுப்பாட்டு அறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சி.சி.டிவி கேமராக்கள் அதிக அளவில் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாநகரில் சாலைகள் அகலப்படுத்தும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அவை முடிந்தவுடன் இன்னும் அதிக அளவில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும். சாலை போக்குவரத்தை சீர் செய்வதற்கு முக்கிய சாலை சந்திப்புகளில் சிக்னல் விளக்குகள் அதிகரிக்கப்படும். அடிக்கடி விபத்து நிகழக்கூடிய பகுதிகளில் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் ஒளிரும் பலகைகள் தேவைப்படும் இடங்களில் வைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். ஆய்வின் போது போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வன், கோபி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story