நாட்டை நல்வழிப்படுத்த காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்


நாட்டை நல்வழிப்படுத்த காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Aug 2020 1:05 AM GMT (Updated: 25 Aug 2020 1:05 AM GMT)

நாட்டை நல்வழிப்படுத்த காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி, 

பாரதநாட்டின் ஒற்றுமையையும், கலாசாரத்தையும் போற்றி பாதுகாக்க மகாத்மாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் பேரியக்கம் நூற்றாண்டை தாண்டி மக்களின் பேராதரவுடன் செவ்வனே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பஞ்சீலக் கொள்கை வகுத்து நாட்டை நல்வழிப்படுத்திய பண்டித நேருவின் 20 அம்ச திட்டத்தை கொண்டு வந்து நாட்டை மறுமலர்ச்சி அடையச் செய்தவர் இந்திராகாந்தி. அறிவியலிலும், தொலைத்தொடர்பு துறையிலும் அற்புதங்கள் பல நிகழ்த்திய தனிப்பெருந்தலைவர் ராஜீவ்காந்தி. சோதனை காலத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர் சோனியாகாந்தி.

இவர்களின் ஒப்பற்ற குணங்களை ஒருங்கே பெற்று காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளித்தவர் இளம் தலைவர் ராகுல்காந்தி என்பதை அனைவரும் அறிவர். ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற உடன் பா.ஜ.க.வின் கோட்டையான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை மாபெரும் வெற்றி பெறச்செய்து வரலாற்று சாதனை படைத்தார்.

ராகுல்காந்தி

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஆட்சியை பிடித்த பா.ஜ.க.விடம், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று பதவியை துச்சமென மதித்து ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது அப்பாவி மக்களை நாள்தோறும் அல்லல்பட வைத்துக்கொண்டிருக்கும் மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியை தட்டிக் கேட்பதற்கும், காங்கிரஸ் கட்சியை கட்டுகோப்பாக வழிநடத்துவதற்கும், ஒப்பற்ற ஆற்றல் பெற்ற தன்னலமற்ற தலைவர் ராகுல்காந்தி மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நாட்டை நல்வழிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story