நீட் தேர்வை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள கூடாது கனிமொழி எம்.பி. பேட்டி


நீட் தேர்வை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள கூடாது கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 29 Aug 2020 10:45 PM GMT (Updated: 29 Aug 2020 6:55 PM GMT)

நீட் தேர்வை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ள கூடாது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் கோமதி நகரில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, கனிமொழி எம்.பி. சலவை தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

தமிழக மாணவர்களை பாதிக்கக்கூடிய நீட் தேர்வு வேண்டாம் என தி.மு.க. தொடர்ந்து போராடி வருகிறது. இந்த ஆண்டுகூட நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து, ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்காக எத்தனையோ உயிர்களை நாம் இழந்துள்ளோம். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தி.மு.க. வலியுறுத்தக்கூடிய கருத்து.

எக்காரணம் கொண்டும் நீட் தேர்வை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள கூடாது. நீட் தேர்வை தொடர்ந்து எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள், மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம் ஆகும்.

கொரோனா பிரச்சினையில் தமிழக அரசு எடுத்துள்ள அத்தனை முன்னெடுப்புகளும், மிக தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி கொண்டுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை கூட மூடி மறைக் கின்றனர். இ-பாஸ் நடைமுறை கொரோனாவை கட்டுப்படுத்த உதவுவதாக தெரியவில்லை. மாறாக லஞ்சம் வாங்கக்கூடிய சிலருக்கு உதவுவதாக உள்ளது. தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். அ.தி.மு.க. ஒருபோதும் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக எட்டயபுரம் அருகே மாசார்பட்டி சமுதாய நலக்கூடத்தில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், ஏழைகள் உள்ளிட்ட 200 பேருக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாசார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளிக்கூட கட்டுமான பணிகளை தரமானதாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் (புதூர் கிழக்கு), மும்மூர்த்தி(மேற்கு), முருகேசன் (கோவில்பட்டி மேற்கு), மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாசார்பட்டி பஞ்சாயத்து தலைவர் கவிதா அய்யாத்துரை, கிளை செயலாளர்கள் சண்முகம், செல்லத்தாய், சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story