கொரோனா தடுப்பு பணிகளை மேம்படுத்த நடவடிக்கை கவர்னர் கிரண்பெடி தகவல்


கொரோனா தடுப்பு பணிகளை மேம்படுத்த நடவடிக்கை கவர்னர் கிரண்பெடி தகவல்
x
தினத்தந்தி 1 Sep 2020 10:47 PM GMT (Updated: 1 Sep 2020 10:47 PM GMT)

புதுவையில் கொரோனா தடுப்பு பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசின் வளர்ச்சி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் அன்பரசுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் பதவி கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் பிறப்பித்துள்ளார். இதுபற்றி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தடுப்பு பணி

புதுச்சேரி அரசு செயலாளர் அன்பரசு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையராக நியமிக்கப்பட்ட உடன் நேற்று மாலை சுகாதார செயலாளருடன் நடந்த கலந்தாய்வில் கலந்துகொண்டார். அவர் இன்று (புதன்கிழமை) மாலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர் மற்றும் ஜிப்மர் மருத்துவர்கள் கொண்ட மத்திய குழுவை சந்திப்பார். மேலும் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணி தொடர்பாக தினமும் அவர் ஆய்வில் ஈடுபடுவார்.

மத்திய அரசால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட உத்திகளை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பார். அவர் ஏற்கனவே கல்வித்துறை செயலாளராகவும் இருப்பதால், தற்போது மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைமையை அணிதிரட்டும் நிலையில் உள்ளார். அன்பரசை உள்ளடக்கிய இந்தகுழு, மத்திய குழுவுடன் நடத்தும் அனைத்து கூட்டுக்கூட்டங்களின் முடிவுகளை தினமும் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேம்படுத்தப்பட்டுள்ளது

இதன் மூலம் புதுவை மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான செயல்களை மேம்படுத்தவும், மத்தியகுழு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே உயர்மட்ட ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் அவசியமானதாக கவர்னர் மாளிகை கருதுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story