நடிகை கங்கனா ரணாவத் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது மும்பை மாநகராட்சி நடவடிக்கையால் பரபரப்பு


நடிகை கங்கனா ரணாவத் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது மும்பை மாநகராட்சி நடவடிக்கையால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Sep 2020 7:44 PM GMT (Updated: 8 Sep 2020 7:44 PM GMT)

நடிகை கங்கனா ரணாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானம் கட்டப்பட்டு இருப்பதாக கூறி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர் நடந்தது.

இதையடுத்து சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது.

மராட்டியத்தில் ஆளும் கட்சியினருடன் மோதல் காரணமாக மும்பை பாந்திராவில் உள்ள தனது அலுவலகத்தை மும்பை மாநகராட்சி இடிக்கலாம் என கங்கனா ரணாவத் நேற்று முன்தினம் அச்சம் தெரிவித்து இருந்தார்.

நோட்டீஸ் ஒட்டப்பட்டது

இந்தநிலையில் பாந்திரா, பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா வீட்டில் பல்வேறு சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அவருக்கு நேற்று காலை நோட்டீஸ் வழங்கியது. நடிகையின் வீட்டில் யாரும் இல்லாததால் அவரது வீட்டு வாசலில் அதிகாரிகள் நோட்டீசை ஒட்டிச்சென்றனர்.

கங்கணா ரணாவத்தின் பங்களாவில் உரிய அனுமதி இல்லாமல் கழிவறை பகுதியை அலுவலகமாக மாற்றியதாகவும், படிக்கட்டு பகுதியில் புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் மாநகராட்சியின் நோட்டீசுக்கு நடிகை கங்கனா ரணாவத் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதனால் கங்கனா ரணாவத் பங்களா வீட்டில் சட்டவிரோத கட்டுமானங்கள் இடிக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story