விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் விவகாரம் 24 முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு நடிகைகள் ராகிணி- சஞ்சனா பரபரப்பு வாக்குமூலம்


விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் விவகாரம் 24 முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு நடிகைகள் ராகிணி- சஞ்சனா பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 9 Sep 2020 9:08 PM GMT (Updated: 9 Sep 2020 9:08 PM GMT)

பெங்களூருவில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தும் வரும் நிலையில், இதில் 24 முக்கிய பிரமுகர் களுக்கு தொடர்பு இருப்பதாக நடிகைகள் ராகிணி- சஞ்சனா ஆகியோர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

நடிகைகள் கைது

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கன்னட திரை உலகை சேர்ந்த 15 நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்திருந்தார். அதன்படி, விசாரணை நடத்திய போலீசார் நடிகை ராகிணி திவேதியை கடந்த 4-ந் தேதி கைது செய்திருந்தனர். இதுதவிர நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், ராகிணி திவேதியின் நண்பர் ரவிசங்கர், வீரேன் கண்ணா, ப்ரீத்வி ஷெட்டி, லோயம் பெப்பர் சம்பா, பிரசாந்த் ரங்கா, நயாஷ் உள்ளிட்டரை கைது செய்துள்ளனர்.

மேலும் நேற்று முன்தினம் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தீவிர விசாரணை

போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள ராகுல் மற்றும் ப்ரீத்வி ஷெட்டி ஆகிய 2 பேரும் கொடுத்த தகவலின் பேரில் தான் நடிகை சஞ்சனா கல்ராணி போலீசாரிடம் சிக்கி இருந்தார். தற்போது நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய 2 பேரும் சித்தாபுரா அருகே உள்ள மகளிர் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று நடிகைகள் 2 பேரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா, உதவி போலீஸ் கமிஷனர் கவுதம் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

குறிப்பாக போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்காக எந்தெந்த விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டீர்கள்?, போதைப்பொருட்களை சப்ளை செய்தவர்கள் யார்?, விருந்து நிகழ்ச்சிகள் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்?. போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட திரை உலகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக சஞ்சனா கல்ராணி தனது செல்போன்களில் இருந்த அனைத்து தகவல்களையும் அழித்திருந்தார்.

24 பேருக்கு தொடர்பு

செல்போன்களில் இருந்த தகவல்களை அழிக்க காரணம் என்ன? என்பது குறித்து சஞ்சனா கல்ராணியிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில், 2 நடிகைகளிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் போது போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் பற்றிய முக்கிய விவரங்களை வாக்குமூலமாக அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது நடிகைகள் ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் பெரும்பாலும் பெங்களூரு புறநகர் பகுதிகளில் உள்ள ரெசார்ட் ஓட்டல்களில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் தான் கலந்துகொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விருந்து நிகழ்ச்சிகளில் கன்னட திரை உலகத்தை சேர்ந்த முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் பிள்ளைகள், முக்கிய தொழில்அதிபர்களின் மகன்கள் என 24 பேரின் பெயர்களை நடிகைகள் ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் போலீசாரிடம் தெரிவித்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக பெங்களூரு நகரில் உள்ள ஒரு எம்.எல்.ஏ.வின் மகனும் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது பற்றியும் 2 நடிகைகளும் போலீசாரிடம் தெரிவித்திருப்பதாக தெரிகிறது.

முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக...

இதையடுத்து, நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக கூறப்படும் ரெசார்ட் ஓட்டல்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராகிணி திவேதியிடம் இன்னும் 2 நாட்கள் விசாரணை நடைபெற இருக்கிறது. அதுபோல, நடிகை சஞ்சனா கல்ராணியிடமும் இன்னும் 3 நாட்கள் விசாரணை நடத்தி போலீசார் தகவல்களை பெற உள்ளனர்.

நேற்று நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவர்களுக்கு எதிராக போலீசாருக்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதற்கிடையில், நடிகைகளிடம் ஒருபுறம் விசாரணை நடந்தாலும் போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள ரவிசங்கர், ராகுல், நியாஷ், ப்ரீத்வி ஷெட்டியிடமும் விசாரணை நடத்தி ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சிகள், போதைப்பொருள் விற்கும் கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டனர்.

Next Story