கரூர் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


கரூர் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 16 Sep 2020 1:00 AM GMT (Updated: 16 Sep 2020 1:00 AM GMT)

கரூர் மாவட்டத்தில் சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

நொய்யல்,

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று இரவு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு புன்னம் சத்திரம் அருகே புன்னத்தில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பித்து வழிபாடு நடைபெற்றது. இரவு சாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து கோவிலை 3 முறை வலம் வந்தார்.

அதேபோல் நத்தமேட்டில் உள்ள சிவன் கோவில், திருக்காடு துறையில் உள்ள மாதேஸ்வரன் உடனுறை மாதேஸ்வரி கோவில். என்.புகளூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பெருமானை தரிசனம் செய்தனர்.

லாலாபேட்டை

லாலாபேட்டையில் புகழ்பெற்ற செம்பொற் சோதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள நந்திக்கு பால், பன்னீர், விபூதி, மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

தோகைமலை

தோகைமலை ஒன்றியம் ஆர்.டி. மலையில் அமைந்துள்ள விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சிவாச்சாரியார் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், சின்னரெட்டிபட்டி ஆவுடையார் கோவில் லிங்கேஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Next Story