திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2020 2:03 AM GMT (Updated: 20 Sep 2020 2:03 AM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர்,

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

புதிய கல்வி கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிட்டு வரை அறிக்கை, மின்சார திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் உலகநாதன், தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், நகர செயலாளர் ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலு, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

முத்துப்பேட்டை-திருவாரூர்

இதேபோல் முத்துப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் செல்லதுரை, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கனகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முருகானந்தம், நகர செயலாளர் மாரியப்பன், நகர துணை செயலாளர் சின்னதம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story