நகை கடையை உடைத்து துணிகரம்: 5 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை


நகை கடையை உடைத்து துணிகரம்: 5 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 21 Sep 2020 2:00 AM GMT (Updated: 21 Sep 2020 2:00 AM GMT)

குமாரபுரம் அருகே நகைக்கடை ஷட்டரை உடைத்து 5 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். லாக்கரை உடைக்க முடியாததால் 35 பவுன் நகை தப்பியது.

பத்மநாபபுரம்,

குமாரபுரம் அருகே மாறாகோணம் முண்டவிளையை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 56). இவருடைய சகோதரர் பகவதி (46). இவர்கள் இருவரும் குமாரபுரம் சந்திப்பில் தங்களுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் நகை பட்டறை மற்றும் நகைக்கடைகளை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை சுந்தரம் கடையை திறக்க வந்தார். பட்டறை மற்றும் நகைக்கடையின் இடையே உள்ள வழிப்பாதையின் கிரில் கேட்டை திறந்தார்.

கொள்ளை

அப்போது, நகைக்கடையின் பக்கவாட்டு ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, கடையின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 5 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி கொலுசு உள்ளிட்டவைகள், நகைகளை வைக்கும் இரும்பு லாக்கர் ஆகியவை மாயமாகி இருந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவர், கடையின் பின்பகுதிக்கு சென்று பார்த்த போது, அங்கு லாக்கர் கிடந்தது.

இதுகுறித்து கொற்றிக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

லாக்கரை உடைக்க முடியாததால்...

அப்போது, நள்ளிரவில் கடையின் பின்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டம் வழியாக வந்த மர்ம நபர்கள் கடையின் பக்கவாட்டு ஷட்டரை உடைத்து நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும், லாக்கரை கடையின் பின்பகுதிக்கு தூக்கிச் சென்று உடைக்க முயன்றுள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் அங்கேயே போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.

இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த கடையில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாய் ஏஞ்சல், கடையில் மோப்பம் பிடித்து விட்டு ஓடியது. அப்பகுதியில் உள்ள ஒரு ஆற்றங்கரை வரை ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் இதுகுறித்து சுந்தரம் கொற்றிகோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நகை கடையில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story