பெங்களூரு, உடுப்பியில் போதைப்பொருள் விற்ற 4 பேர் சிக்கினர் ‘டார்க்நெட்’ இணையதளத்தை பயன்படுத்தி வாங்கியது அம்பலம்


பெங்களூரு, உடுப்பியில் போதைப்பொருள் விற்ற 4 பேர் சிக்கினர் ‘டார்க்நெட்’ இணையதளத்தை பயன்படுத்தி வாங்கியது அம்பலம்
x
தினத்தந்தி 29 Sep 2020 10:16 PM GMT (Updated: 29 Sep 2020 10:16 PM GMT)

பெங்களூரு, உடுப்பியில் போதைப்பொருள் விற்ற 4 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து உள்ளனர். ‘டார்க்நெட்’ இணையதளத்தை பயன்படுத்தி அவர்கள் போதைப்பொருள் வாங்கியது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதுபோல அவர்களது நண்பர்களான ராகுல், ரவிசங்கர், போதைப்பொருள் விற்பனையாளர்கள் லோயம் பெப்பர் சம்பா, வீரேன் கண்ணா உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்பட்டு இருப்பதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெதர்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் வந்த வெங்காய மூட்டையை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது அதில் 750 எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தன. அதை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பார்சல், பிரமோத் என்பவருக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போதைப்பொருட்களை வாங்கி விற்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பிரமோத்தை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது கூட்டாளிகளான பாகிம், ஹசீர், ஷெட்டி ஆகியோரை கைது செய்தனர்.

இதில் பாகிம் என்பவர் ‘டார்க்நெட்’ இணையதளத்தை பயன்படுத்தி போதைப்பொருள் வாங்க மூளையாக செயல்பட்டு உள்ளார். அவ்வாறு வாங்கும் போதைப்பொருட்களுக்கான தொகையை ‘பிட்காயின்’ மூலம் செலுத்தி வந்து உள்ளார். கைதான 4 பேரும் சேர்ந்து பெங்களூரு, உடுப்பியில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்றதும் அம்பலமாகி உள்ளது. கைதான 4 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story