ஆசனூர் அருகே கரும்பு இல்லாததால் வேனை முட்டித்தள்ளிய யானை


ஆசனூர் அருகே கரும்பு இல்லாததால் வேனை முட்டித்தள்ளிய யானை
x
தினத்தந்தி 7 Oct 2020 12:22 AM GMT (Updated: 7 Oct 2020 12:22 AM GMT)

ஆசனூர் அருகே கரும்பு இல்லாததால் வேனை யானை முட்டித்தள்ளியது.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக அளவுக்கு அதிகமாக கரும்பு பாரம் ஏற்றிவரும் லாரிகளில் இருந்து வீசியெறியும் கரும்பு துண்டுகளை யானைகள் சுவைத்து பழகிவிட்டன.

இதனால் தமிழக, கர்நாடக எல்லையான காராப்பள்ளம் வன சோதனைச்சாவடியில் எப்போதும் யானைகளின் நடமாட்டத்தை காணமுடியும். இவ்வாறு ரோட்டு ஓரம் சுற்றும் யானைகள் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் கரும்பு பார லாரிகளை வழிமறித்து, கரும்புகளை எடுத்து தின்கின்றன.

முட்டி தள்ளியது

இந்தநிலையில், நேற்று அதிகாலை காராப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே ஒரு பெட்ரோல் டேங்கர் லாரி வந்தது. அது கரும்பு பாரம் ஏற்றிய லாரியோ? என்று நினைத்து யானை ஒன்று லாரியை மறித்தது. டிரைவர் அலறி பயந்தபடியே இருக்கையில் இருந்தார். ஆனால் லாரியில் கரும்பு இல்லை என்று தெரிந்துகொண்டதும் யானை லாரியை விட்டு நகர்ந்தது. உடனே டிரைவர் லாரியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அதன்பின்னர் சரக்கு வேன் ஒன்று அந்த வழியாக வந்தது. யானை வேனையும் வழிமறித்து பார்த்தது. வேனின் மேல்பகுதியில் துதிக்கையை விட்டு தேடிப்பார்த்தது. அதிலும் கரும்புகள் இல்லாததால் ஆத்திரமடைந்து, வேனின் பின் பகுதியில் தலையால் முட்டி தள்ளியது.

டிரைவர் ஓட்டம்

பயந்து அலறிய டிரைவர் வேனில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார். இந்த காட்சியை கண்ட மற்ற வாகன ஓட்டிகள் ரோட்டில் அப்படியே தங்களுடைய வாகனங்களை நிறுத்திக்கொண்டார்கள்.

எந்த வாகனத்திலும் கரும்புகள் இல்லை என்று தெரிந்தபின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னரே போக்குவரத்து தொடங்கியது.

ருசி கண்ட யானைகள்

கரும்பு பாரம் ஏற்றிவரும் லாரி டிரைவர்கள் கரும்பு கட்டுகளை ரோட்டில் போட்டு யானைகளுக்கு பழக்கி விட்டனர். இதனால் ருசி கண்ட யானைகள் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து ரோட்டிலேயே சுற்றுகின்றன.

சில நேரம் கரும்புகள் இல்லாமல் வரும் லாரி, சரக்கு ஆட்டோ, வேன்களை வழிமறித்து தாக்குகின்றன.

எனவே கரும்பு பாரம் ஏற்றி வருபவர்கள் ரோட்டில் கரும்பு கட்டுகளை போடுவதை தவிர்க்கவேண்டும். சோதனை சாவடி போலீசார் இதை கண்காணிக்க வேண்டும்.

வனத்துறையினர் ரோட்டில் சுற்றும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Next Story