அ.தி.மு.க.வை வலுப்படுத்த 6 அமைச்சர்கள் உள்பட 11 பேர் அடங்கிய வழிகாட்டு குழு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


அ.தி.மு.க.வை வலுப்படுத்த 6 அமைச்சர்கள் உள்பட 11 பேர் அடங்கிய வழிகாட்டு குழு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 11:02 PM GMT (Updated: 7 Oct 2020 11:02 PM GMT)

அ.தி.மு.க.வை வலுப்படுத்துவதற்காக 6 அமைச்சர்கள் உள்பட 11 பேர் அடங்கிய வழிகாட்டு குழுவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை,

அ.தி.மு.க.வை வலுப்படுத்துவதற்காக 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்படும் என்று சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் வேட்பாளர் விவகாரத்துடன், வழிகாட்டுதல் குழு விவகாரமும் விஸ்வரூபம் எடுத்தது. 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைத்து, அந்த குழுவே முதல்-அமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யவேண்டும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன்படாமல் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளரும், வழிகாட்டுதல் குழுவும் இறுதி செய்யப்பட்டது.

அதன்படி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிப்புடன், வழிகாட்டுதல் குழு அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

11 பேர்கள் யார்-யார்?

இந்த அறிவிப்பை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு பேசியதாவது:-

ஜெயலலிதாவின் நல்ல ஆசியோடு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்), இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி பழனிசாமி), துணை ஒருங்கிணைப்பாளர்களின் ஏகமனதோடு பொதுக்குழு தீர்மானித்தபடி 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுகிறது.

வழிகாட்டு குழு உறுப்பினர்களின் விவரம் வருமாறு:-

கட்சியின் அமைப்பு செயலாளர்களும், அமைச்சர்களுமான திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், அமைப்பு செயலாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி. பி.எச்.மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் ப.மோகன், தேர்தல் பிரிவு இணை செயலாளரான முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் எம்.எல்.ஏ. கி.மாணிக்கம் ஆகிய 11 பேர் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பை வரவேற்று, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘அ.தி.மு.க.வின் பொதுக்குழு தீர்மானத்தின்படி வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இணை ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல் குழுவை அறிவித்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள 11 பேருக்கும் என்னுடைய இதயபூர்வ நல்வாழ்த்துகளை தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.’ என்றார்.

அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழுவில் எடப்பாடி பழனிசாமி சார்பில் 6 அமைச்சர்களும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 5 பேரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story