தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு


தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 12:09 AM GMT (Updated: 9 Oct 2020 12:09 AM GMT)

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. இவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த விமல், விஜய், சந்தோஷ், ரீகன், தேன்ராஜ், ஆரோக்கியம் ஆகிய 6 மீனவர்களும் கடந்த 4-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடந்த 07.10.20-ந் தேதி காலை 5 மணியளவில் தருவைகுளத்தில் இருந்து சுமார் 65 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது படகின் அடிப்பாகத்தில் எதிர்பாராதவிதமாக விரிசல் ஏற்பட்டு கடல் நீர் உள்ளே புகுந்தது. இதனால் விசைப்படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீட்பு

உடனே, கடலோர காவல்படை ரோந்து கப்பல் வைபவ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. அங்கு நடுக்கடலில் தத்தளித்து கொண்டு இருந்த 6 மீனவர்களையும் கடலோர காவல்படையினர் மீட்டனர்.

தொடர்ந்து அந்த படகில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர். தொடர்ந்து 6 மீனவர்கள் மற்றும் விசைப்படகை பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். நேற்று அதிகாலையில் மீனவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

Next Story