சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Oct 2020 11:12 PM GMT (Updated: 15 Oct 2020 11:12 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த அப்துல் ரகுமான்கான் (வயது 36) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து அப்துல் ரகுமான் கானை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவருடைய உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.21 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 416 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

தங்க தகடுகள்

அதே விமானம் வந்தபோது குடியுரிமை சோதனை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், விமான நிலையத்தில் கண்காணிப்பு கேமராவை சரிபார்க்கும் சாப்ட்வேர் என்ஜினீயரான சென்னையைச் சேர்ந்த அவினாஷ் (28) என தெரியவந்தது.

அவரை சோதனை செய்தபோது அவரது சட்டை, பேண்ட் பையில் தங்க தகடுகள் மற்றும் காயின்கள் இருந்தன. இது பற்றி விசாரித்தபோது துபாயில் இருந்து சென்னை வந்த முகமது கவுஸ் (26) என்பவர் இந்த தங்கத்தை தந்து விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் வந்து தருமாறு கூறியதாக தெரிவித்தார்.

3 பேர் கைது

இதையடுத்து அவினாஷ் மற்றும் விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் இருந்த முகமது கவுஸ் இருவரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ரூ.18 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 348 கிராம் தங்கத்தை கைப்பற்றினார் கள்.

சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.40 லட்சத்து ஆயிரம் மதிப்புள்ள 764 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர் பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story