போதைப்பொருள் பயன்படுத்தியதாக ‘பிக்பாஸ்’ போட்டியாளர் திருநங்கை ஆடம் பாஷா கைது


போதைப்பொருள் பயன்படுத்தியதாக ‘பிக்பாஸ்’ போட்டியாளர் திருநங்கை ஆடம் பாஷா கைது
x
தினத்தந்தி 20 Oct 2020 9:34 PM GMT (Updated: 20 Oct 2020 9:34 PM GMT)

போதைப்பொருள் பயன்படுத்தியதாக ‘பிக்பாஸ்’ போட்டியாளரும், திருநங்கையுமான ஆடம் பாஷா கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு கல்யாண்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சிக்கியது. இதுதொடர்பாக கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, அவரது கூட்டாளிகள் அனூப், ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 பேரும் கன்னட திரையுலகினருக்கு, போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திருநங்கை கைது

இந்த நிலையில் சின்னத்திரை நடிகை அனிகாவிடம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அனிகா, பெங்களூருவை சேர்ந்த நடன கலைஞரும், திருநங்கையுமான ஆடம் பாஷாவுக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததும், போதைப்பொருளை ஆடம் பாஷா பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆடம் பாஷாவை நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநங்கையான ஆடம் பாஷா கடந்த ஆண்டு நடந்த கன்னட ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story