இருசக்கர வாகனத்தில் சென்றபோது 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பலி


இருசக்கர வாகனத்தில் சென்றபோது 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பலி
x
தினத்தந்தி 22 Oct 2020 11:26 PM GMT (Updated: 22 Oct 2020 11:26 PM GMT)

பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.

திரு.வி.க. நகர், 

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 53). இவர், சென்னை விமான நிலையத்தில் சுங்க துறையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி உஷா(48). கணவன்-மனைவி இருவரும் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் புரசைவாக்கம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினர்.

ஓட்டேரி ஜமாலியா வழியாக பெரம்பூர் நோக்கி முரசொலிமாறன் மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென பாலத்தின் வளைவு பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

கணவன்-மனைவி பலி

இதனால் இருவரும் சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள சாலையில் வந்து விழுந்தனர். அவர்களது இருசக்கர வாகனம் மேம்பாலத்திலேயே விழுந்து கிடந்தது. சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த உஷா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாலாஜியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இந்த பாலத்தில் பெரும்பாலும் வாகனங்கள் செல்லாததால் ஓட்டேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், திரு.வி.க. நகரை சேர்ந்த வாலிபர்கள் அடிக்கடி மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவது வழக்கம். அதுபோல் மோட்டார்சைக்கிள் பந்தயம் நடந்தபோது அவர்களின் அச்சுறுத்தலால் நிலைதடுமாறி விழுந்தார்களா? அல்லது தாங்களாகவே கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவரில் மோதி விழுந்தார்களா? என்ற கோணத்தில் ஐ.சி.எப். மற்றும் செம்பியம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story