நாமக்கல்லில் லாரி-கூரியர் வேன் மோதல்; டிரைவர் சாவு


நாமக்கல்லில் லாரி-கூரியர் வேன் மோதல்; டிரைவர் சாவு
x
தினத்தந்தி 23 Oct 2020 3:41 PM GMT (Updated: 23 Oct 2020 3:41 PM GMT)

நாமக்கல்லில் லாரி மற்றும் கூரியர் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்,

திருச்சி மாவட்டம் காட்டுபுத்தூரில் இருந்து விறகு பாரம் ஏற்றிக்கொண்டு நாமக்கல் வழியாக ஈரோட்டிற்கு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை மோகனூர் அருகே உள்ள வாழவந்தியை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார் (வயது25) என்பவர் ஓட்டி சென்றார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் இந்த லாரி நாமக்கல்-திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே கர்நாடக மாநிலத்தில் இருந்து கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான வேன் ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும், கூரியர் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இதில் லாரி மற்றும் வேனின் முன்புறம் அப்பளம்போல நொறுங்கியது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், இடிபாடுகளில் சிக்கிய இரு வாகனத்தின் டிரைவர்களையும் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் லாரி டிரைவர் சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். வேன் டிரைவர் ரவிக்கு (40) தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story