ஜெயங்கொண்டத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


ஜெயங்கொண்டத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 28 Oct 2020 11:15 PM GMT (Updated: 28 Oct 2020 11:15 PM GMT)

ஜெயங்கொண்டத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பழமை வாய்ந்த சவுந்தர நாயகி அம்பாள் சமேத சோழீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்குள் உள்ள நந்தவன இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்தார். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என கருதப்படுகிறது. இதனையடுத்து நேற்று அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் போலீசார், வருவாய் துறையினர் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிவன் கோவில் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பக்தர்கள் மகிழ்ச்சி

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கோவிலில் தனி நபர் ஆக்கிரமிப்பு இடத்தினை மீட்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் மீட்கப்பட்ட இடத்தில் சுற்று சுவர் அமைத்து யாரும் உள்ளே செல்லாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீட்கப்பட்ட இடத்தில் பழையபடி மீண்டும் நந்தவனம் அமைத்து மடப்பள்ளி அமைக்க வேண்டும் என்றனர்.

Next Story