வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க தடை விதிக்கக்கோரி வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்


வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க தடை விதிக்கக்கோரி வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 30 Oct 2020 4:01 AM GMT (Updated: 30 Oct 2020 4:01 AM GMT)

வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க தடை விதிக்கக்கோரி வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேதாரண்யம், 

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் கோடியக்கரைக்கு வெளிமாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாவட்ட மீனவர்கள் குடும்பத்துடன் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கோடியக்கரைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்வதால் எங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மனு அளித்தனர். அதன் பேரில் வேதாரண்யம் தாசில்தார் முருகு தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுமூகமான தீர்வு ஏற்படவில்லை.

வேலைநிறுத்தம்

இதையடுத்து வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், மணியன்தீவு, வணவன்மகாதேவி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க தடைவிதிக்கக்கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று முதல் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் தங்களது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story